Last Updated : 28 Feb, 2020 02:01 PM

 

Published : 28 Feb 2020 02:01 PM
Last Updated : 28 Feb 2020 02:01 PM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா இன்று (பிப்.28) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 5.30 மணியளவில் கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆலயச் செயல் அலுவலர் (இஓ) அம்ரித் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மார்ச் 5-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 4.30 மணியளவில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

மார்ச் 6-ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு பகல் 12 மணிக்கு மேல் சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேருகிறார்.

மார்ச் 8-ம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் ஆலய வளாகத்தில் சிறப்பு பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x