Published : 28 Feb 2020 08:12 AM
Last Updated : 28 Feb 2020 08:12 AM

காஞ்சிபுரம் கோயிலில் வடகலை, தென்கலை பிரச்சினை: இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு- மீறினால் போலீஸில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல்

சென்னை

காஞ்சிபுரம் கோயிலில் வடகலை, தென்கலை பிரச்சினை தொடர்பாக இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்த வேண்டும் என்றும், மீறினால் போலீஸில் சட்டரீதியாக புகார் அளிக்க வேண்டும் என்று கோயில் உதவி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டி.ஏ.ரங்கநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘‘காஞ்சிபுரம் சந்நிதிதெருவில் உள்ள ஸ்ரீதேவராஜ சுவாமி கோயிலில் வேத மந்திரங்கள் மற்றும் பிரபந்தங்களை யார் முதலில் பாடுவது என்பதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் கோயில் திருவிழா சமயங்களில் பக்தர்கள் பெரிதும் அவதியடையும் சூழல் ஏற்படுகிறது. நிம்மதி தேடி கோயிலுக்கு
வருபவர்கள் இப்பிரச்சினையால் நிம்மதியை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 1915 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் தென்கலை பிரிவினர் முதலில் பிரபந்தங்கள் பாடவும், வடகலை பிரிவினர் அடுத்து வேத மந்திரங்கள் முழங்கவும் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை
அமல்படுத்தாத அதிகாரியை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.எஸ்.ராமசுவாமியும், அறநிலையத் துறை சார்பில் சிறப்புஅரசு ப்ளீடர் எம்.கார்த்திகேயனும் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சுமுகமான வழிபாடு இல்லை

கோயில்களில் மந்திரங்கள் மற்றும் பிரபந்தம் பாடி வழிபாடுநடத்துவது என்பது வழிபாட்டு உரிமை. அதை நீதிமன்றம் தடுக்க முடியாது. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுகளாக சுமுகமான வழிபாடு இல்லை.

அதேபோல கோயில் வழிபாட்டுத் தலங்களில் தனிநபர்பகை அல்லது எதேச்சதிகாரத்துக்கும் இடம் கிடையாது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளஇடமில்லை.

மேலும், கோயில் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கீழ்கண்ட உத்தரவை பிறப்பிக்கிறேன். கோயில்
நிர்வாக அதிகாரி பூஜை நேரங்களில் முதலில் தென்கலை பிரிவினரை சிலைக்கு முன்பக்கமாக அழைக்க வேண்டும். அவர்களை ஸ்ரீசைலேச தயா பாத்ரத்தின் முதல் 2 வரிகளை மட்டும் பாட அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு வடகலை பிரிவினரை அழைத்து  ராமானுஜ தயா பாத்ரத்தில் உள்ள முதல் 2 வரிகளை பாட அனுமதிக்க வேண்டும்.

அதன்பிறகு தென்கலை மற்றும் வடகலை பிரிவினர் இருவரும் ஒன்றாக இணைந்து பிரபந்தம் பாட வேண்டும். பிரபந்தம் பாடிய பிறகு, இறுதியாக தென்கலையினர் மணவாள மாமுனிகள் வாழித் திருநாமம் பாட வேண்டும்.

அடுத்து, வடகலையினர் தேசிகன் வாழித் திருநாமம் பாடிபூஜையை நிறைவு செய்ய வேண்டும். ஒருவேளை இந்த உத்தரவுப்படி
ஒருதரப்பு மறுப்பு தெரிவித்தால் பாட முன்வரும் மற்றொரு தரப்பை செயல் அதிகாரி அனுமதிக்க வேண்டும்.

இந்த உத்தரவை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும். மீறி சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கோயில் நிர்வாக அதிகாரி சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸில் சட்டரீதியாக புகார் அளிக்கவேண்டும்.

போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை வரும் மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x