

சென்னை தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட 8 ரயில்நிலையங்களில் பேட்டரி வாகனவசதியைக் கொண்டு வருவதற்கான பணியை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, முக்கிய ரயில் நிலையங்களில் படிப்படியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். பெரிய ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், நோயாளிகள் போன்றவர்கள் விரைவு ரயில் பெட்டிகளைக் கண்டறிந்து பயணம் செய்வது சிரமமாக உள்ளது.
அவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் பேட்டரி வாகன வசதியை விரிவுபடுத்த உள்ளோம். சென்னை சென்ட்ரலில் தற்போது 4 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு கூடுதலாக பேட்டரிவாகனங்களை இயக்க உள்ளோம்.
இதுதவிர, தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களிலும் பேட்டரி வாகன சேவையை தொடங்க உள்ளோம். இதற்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் பேட்டரி வாகன சேவை தொடங்கப்படும்.