Last Updated : 27 Feb, 2020 09:15 PM

 

Published : 27 Feb 2020 09:15 PM
Last Updated : 27 Feb 2020 09:15 PM

சிக்கனில் கரோனா வைரஸ் என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய  சிறுவன் கைது

சகானா சிக்கன் சென்டரில் சிக்கன் வாங்கினால் கரோனா வைரஸ் பரவும் என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய நெய்வேலியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டார்.

வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவிய தகவல்

''நெய்வேலி வட்டம் 29-ல் உள்ள சகானா சிக்கன் சென்டரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பாண்டி என்பவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். அவர் என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்''.

இவ்வாறு வாட்ஸ் அப்பில் தகவல் வைரலாகப் பரவி வந்தது.

இதனால் நெய்வேலியில் கரோனா வைரஸ் எனற தகவலால் கடலூர் மாவட்டமே பீதி ஏற்பட்டது.

மேலும் இது நெய்வேலி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனால் சகானா சிக்கன் கடையில் சிக்கன் வாங்க யாரும் வரவில்லை. நெய்வேலியில் வசிப்பவர்களின் உறவினர்களும், நண்பர்களும் தமிழகம் முழுவதிலும் இருந்து இதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இந்தத் தகவல் திரும்பத் திரும்ப வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வந்தபடியே இருந்தது.

இந்தத் தகவலால் மனரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சகானா சிக்கன் சென்டர் உரிமையாளர் பக்ருதீன் அலி முகம்மது, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில், ''கடந்த 20 ஆண்டுகளாக வட்டம் 29 சூப்பர் பஜாரில் சிக்கன் கடை நடத்தி வருகிறேன். எனது கடைக்கு நெய்வேலி வட்டம் 21-ஐ சேர்ந்த சக்திவேல் என்பவர் அடிக்கடி சிக்கன் வாங்கிக் கொண்டு பணம் தராமல் தகராறு செய்து வந்தார். நான் கடன் தராததால் என் கடையின் மீது களங்கம் ஏற்படுத்த தனது வாட்ஸ் அப் மூலம் இப்படி ஒரு பொய்யான வதந்தியைப் பரப்பியுள்ளார். இதனால் எனது வாடிக்கையாளர்களும், குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனது வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, சக்திவேல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து நெய்வேலி தெர்மல் போலீஸார் தவறான தகவலைப் பரப்புதல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று இரவு சக்திவேலைக் கைது செய்தனர். அவருக்கு 17 வயதுதான் ஆவதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பண்ருட்டி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

மேலும் சக்திவேல், தான் தவறான தகவல் பரப்பியதாகவும் தான் கூறிய தகவல் தவறு எனக் கூறும் வீடியோ வாட்ஸ் அப்பில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

சிக்கன் கடைக்காரர் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதற்கும், கடன் கொடுக்காதற்கும் ஆத்திரத்தில் அவர் கடையில் சிக்கன் வாங்கினால் கரோனா வைரஸ் பரவும் எனத் தகவல் பரப்பிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x