Published : 27 Feb 2020 08:59 PM
Last Updated : 27 Feb 2020 08:59 PM

அன்பழகன் உடல்நிலை; பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: தொண்டர்கள் வாழ்த்து கூற வரவேண்டாம்- ஸ்டாலின் வேண்டுகோள்

பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பிறந்த நாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. தொண்டர்கள் யாரும் வாழ்த்து கூற வரவேண்டாம் என்று ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து திமுக உடன்பிறப்புகள், நிர்வாகிகளுக்கு மு.கஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்:

''தமிழினத்தின் நிரந்தரப் பேராசிரியரும் - திமுகவின் பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கால் நூற்றாண்டு காலம், இந்த இனத்துக்கும் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியரின் உடல் நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச்1-ம் நாள், நான் எனது பிறந்த நாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, திமுக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள், என் மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச்-1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன்.

தமிழர் நலன் காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியப் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x