Published : 27 Feb 2020 07:35 AM
Last Updated : 27 Feb 2020 07:35 AM

பல நாடுகளில் வேகமாக பரவி வரும் கோவிட்-19 வைரஸ்- இத்தாலி, ஈரான், கொரியா நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 28 நாட்கள் கண்காணிப்பு

சென்னை

உலகின் பல நாடுகளில் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதால் சீனாவுடன் சேர்த்து இத்தாலி, ஈரான், கொரியா நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காய்ச்சல் (கோவிட்-19) சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்தவைரஸால் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் இருந்து கேரளா வந்த 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, நாடுமுழுவதும் விமான நிலையங்களில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, சீனா உள்ளிட்டநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி,மதுரை, கோவை விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர், சீனாவில்இருந்து வரும் பயணிகளை வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தங்கவைத்து 28 நாட்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல், வைரஸ் பரவியுள்ள ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் ஆகிய8 நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களையும் 28 நாட்கள் கண்காணிக்கின்றனர்.

தற்போது இத்தாலி, ஈரான், கொரியா ஆகிய நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனால், அந்த நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்களை 28 நாட்கள்தனிமைப்படுத்தி கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து கடந்த ஒன்றரைமாதங்களில் தமிழகம் வந்த73,334 பேர் விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில், 2,327 பேர் 28நாட்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 682 பேரும்,ராமநாதபுரத்தில் 219 பேரும், புதுக்கோட்டையில் 150 பேரும் காஞ்சிபுரத்தில் 103 பேரும், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

48 பேருக்கு ரத்த மாதிரி சோதனை

இதுவரை 48 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், 47 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

ஒருவரது ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. கன்னியாகுமரி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் உடல்நிலை நன்றாக உள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x