Published : 27 Feb 2020 07:07 AM
Last Updated : 27 Feb 2020 07:07 AM

சென்னை எழும்பூருக்கு இணையாக தாம்பரம் ரயில் முனையத்தில் 13 நடைமேடைகள்: 5 தனியார் ரயில்களை இயக்க வாரியம் முடிவு

சென்னை

சென்னை எழும்பூர் ரயில் முனையத்துக்கு இணையாக தாம்பரம் ரயில் முனையத்தில் 13 நடைமேடைகள் அமைத்து, கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இங்கிருந்து 5 தனியார் ரயில்களை இயக்கவும் ரயில்வே வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.

வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல், பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், ஏற்கெனவே ரயில்களை இயக்கி வரும் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து, தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

எழும்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான தினசரி மற்றும் வாராந்திர விரைவு ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தாம்பரம் ரயில் முனையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தைத் தொட்டுள்ளது.

ரயில்வே வாரியம் நாடுமுழுவதும் முக்கிய நகரங்களை தேர்வு செய்து முதல்கட்டமாக 150 தனியார் ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தெற்கு ரயில்வேயில் மொத்தம் 11 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து மட்டுமே தாம்பரம் - திருச்சி, தாம்பரம் - மதுரை, தாம்பரம் - கன்னியாகுமரி, தாம்பரம் - பெங்களூரு, தாம்பரம் - திருச்சி என 5 தனியார் ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் ஆலோசித்து வருகிறது. எனவே, தாம்பரம் ரயில் முனையத்தில் படிப்படியாக கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தப்படவுள்ளது.

கூடுதல் ரயில்கள்

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை. இதனால், தாம்பரம் ரயில் முனையத்தை விரிவாக்கம் செய்து கூடுதல் ரயில்களை இயக்கவுள்ளோம். தேவைப்படும் இடங்களில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

குறிப்பாக, தற்போதுள்ள 8 நடைமேடைகளின் எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தவுள்ளோம். இதன்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியும். அதுபோல், இங்கிருந்து சில இடங்களுக்கு தனியார் ரயில்களை இயக்கவும், வழித்தடங்களைத் தேர்வு செய்து ரயில்வே வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான, டெண்டர்களை ரயில்வே வாரியம் விரைவில் வெளியிடும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x