Published : 26 Feb 2020 12:57 PM
Last Updated : 26 Feb 2020 12:57 PM

ஒற்றுமையான பன்முக இந்தியாவில் வெறுப்பின் குழந்தைகள்: கமல் ட்வீட்

டெல்லியில் நடக்கும் வன்முறையைக் கண்டித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். எந்த மதமும் வெறுப்பைப் பரப்புவதில்லை. மக்கள் மட்டும்தான் பரப்புகிறார்கள். அனைத்தையும் நிறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்ததுக்கு (சிஏஏ) எதிராக ஏற்கெனவே டெல்லி ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்தக் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய் இரவு வரை காயமடைந்தவர்களில் 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட முக்கியமான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பலரும் கலவரத்தைக் கண்டித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்ய நிறுவனர் தலைவர் கமல் வன்முறையைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“என்னுடைய ஒற்றுமையான, பன்முக இந்தியாவில் வெறுப்பின் குழந்தைகளாக இவர்களைக் கட்டுப்பாடற்று அலைய எவ்வாறு அனுமதிக்க முடியும். அனைத்தையும் நிறுத்துங்கள். இன்னும் தாமதமாவதற்கு முன் புரிந்து கொள்ளுங்கள். எந்த மதமும் வெறுப்பைப் பரப்புவதில்லை, மக்கள் மட்டும்தான் பரப்புகிறார்கள்.

இதுபோன்ற பைத்தியக்காரத்தினத்தில் இருந்து இந்தியா இதற்குமுன் தப்பிவிட்டது, மீண்டும் என் தேசம் அதிலிருந்து தப்பிக்கும் என உறுதியாக நம்புகிறேன்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x