Last Updated : 26 Feb, 2020 11:39 AM

 

Published : 26 Feb 2020 11:39 AM
Last Updated : 26 Feb 2020 11:39 AM

மதுரை ஆவினில் காலியாக உள்ள 6 இயக்குநர் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி

மதுரை ஆவினில் காலியாக உள்ள 6 இயக்குநர் பதவியிடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள் உள்ளடங்கிய மதுரை ஆவினுக்கு 15.12.2018-ல் தேர்தல் நடத்தப்பட்டு நான் உட்பட 17 பேர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டோம்.

இந்நிலையில் மதுரை ஆவினில் இருந்து தேனி மாவட்ட ஆவின் தனியாக 22.8.2019-ல் பிரிக்கப்பட்டது.

மதுரை ஆவின் இயக்குநர்கள் 17 பேரில் நான் உட்பட 11 பேர் மதுரை ஆவின் இயக்குநர்களாகவும், 6 பேர் தேனி இயக்குநர்களாகவும் மாற்றப்பட்டோம்.

இந்நிலையில் மதுரை ஆவினுக்கு தேர்தல் நடத்தாமல் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழரசன் மதுரை ஆவினுக்கு உட்பட்ட 11 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக இல்லை. வாக்காளர் பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. இருப்பினும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவரது நியமனத்தை ரத்து செய்து, தேர்தல் நடத்தி நிர்வாகக்குழுவை தேர்வு செய்யவும், அதுவரை ஆவின் நிர்வாகத்தை பொதுமேலாளர் கவனிப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தேர்தல் தொடர்பாக கூட்டுறவு தேர்தல் ஆணையம் 11.2.2020-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை ஆவினுக்கு 17 இயக்குனர்களை தேர்வு செய்யவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மதுரை ஆவினில் ஏற்கெனவே நான் உட்பட 11 இயக்குநர்கள் உள்ளோம். எங்கள் பதவிக்காலம் 14.12.2023-ல் தான் முடிகிறது. இதனால் மதுரை ஆவினில் காலியாக உள்ள 6 இயக்குநர் பதவிகளுக்கு தான் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட 11 இயக்குனர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்துவது சட்டவிரோதம்.

எனவே, கடந்த 15.12.2018-ல் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர்கள் பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தும், ஆவின் நிர்வாகக்குழு தேர்தல் தொடர்பாக மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் 11.2.2020-ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும், மதுரை ஆவினில் காலியாக உள்ள 6 இயக்குனர் பதவியிடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும்"
எனக் கூறியிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது அரசுத்தரப்பில்," தமிழகத்தில் 7 ஆவின்கள் இருந்தன. தற்போது 14-க உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆவின் நிர்வாகங்களுக்கு முறையாக தேர்தல் நடத்தி அனைத்து இயக்குனர்களையும் தேர்வு செய்ய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்ட பிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x