Published : 26 Feb 2020 07:30 AM
Last Updated : 26 Feb 2020 07:30 AM

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு; ஆரம்ப கட்ட விசாரணையை அனுமதியின்றி முடிக்க கூடாது: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள ஊழல் வழக்கில், நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஆரம்பகட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை முடிவுக்கு கொண்டுவரக் கூடாது என அறிவுறுத்தியும் இதுதொடர்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலரான ஜெயராம் வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற 112 பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.

ஒப்பந்தத்தின்படி இந்த பணிகளுக்கு ஆற்றுமணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் ஆற்று மணலை பயன்படுத்தாமல் எம்-சாண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கனஅடி ஆற்றுமணல் ரூ.120 மட்டுமே. அதேபோல எம்-சாண்டின் விலை ரூ.50-தான். ஆற்றுமணல் பயன்படுத்தியதுபோல ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியிடம் இருந்து தொகையை வசூலித்துள்ளனர்.

இதேபோல தார் சாலை அமைக்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடந்துள்ளது. ரூ.2700-க்கு விற்கப்படும் ஒரு யூனிட் தாருக்கு, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் ரூ.600 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றம் சாட்டியிருப்பதால் அவரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும் எதிர்மனுதாரராக சேர்த்து மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, இதுதொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்து, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறை இதுதொடர்பாக விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டுவரக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையர், லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் ஏப்ரல் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x