Published : 26 Feb 2020 07:17 AM
Last Updated : 26 Feb 2020 07:17 AM

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது விபத்து நடந்த இடத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஆய்வு- நேரில் ஆஜராக லைகா நிர்வாகிகளுக்கு சம்மன்

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது விபத்து நடந்த இடத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லைகா நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் ‘ஈவிபி’ பிலிம்சிட்டியில், கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன்-2’ திரைப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு தளத்தில் கடந்த 19-ம்தேதி இரவு நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத்பேட்டை காவல் நிலையபோலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றிசென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

முதல் கட்டமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் சி.ஈஸ்வர மூர்த்தி, துணை ஆணையர் ஜி.நாகஜோதி ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்கள், நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

அடுத்ததாக ‘இந்தியன் 2’ திரைப்படத்தை தயாரிக்கும், தயாரிப்புநிறுவனமான லைகா நிறுவன நிர்வாகிகளுக்கும் நேரில் ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளதாகபோலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோருக்கும் சம்மன்அனுப்பி நேரில் விசாரிப்போம் என்றும், எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி விசாரணை நடந்து வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x