Published : 25 Feb 2020 08:39 PM
Last Updated : 25 Feb 2020 08:39 PM

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்: தேர்வுத்துறையின் 10 அறிவுறுத்தல்கள்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் தேர்வெழுதும் மாணவர்கள் ஸ்கெட்ச், வண்ண பென்சில்களைப் பயன்படுத்தக் கூடாது என அரசு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். தேர்வுத்துறையும் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதுகுறித்து தேர்வுத்துறை விடுத்துள்ள அறிவிப்பு:

* தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகள் போஸ்டராக பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டு இருக்கும். இதுமட்டுமின்றி தேர்வின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அரசு தேர்வுத்துறை தேர்வு நுழைவுச் சீட்டில் (ஹால்டிக்கெட்) அறிவுரையாக அச்சிடப்பட்டுள்ளது.

* மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. அதில், பிறந்த தேதி, நிரந்தரப் பதிவெண், பதிவெண், தேர்வு மையத்தின் பெயர், முகவரி, மாணவர் பயின்ற பள்ளியின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

* தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே, தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

* செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்கள் வளாகத்துக்குள், தேர்வு அறையினுள் எடுத்து வர அனுமதி இல்லை.

* அனைத்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் (சொல்வதை எழுதுபவர்கள், மொழிப்பாட சலுகை) உள்ளிட்ட அரசாணையின் விதிகளின்படி வழங்கப்படும்.

* தேர்வில் விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள், கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது.

* தேர்வர்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவும் அல்லது தனியாகப் பிரித்து எடுத்துச் செல்லவும் கூடாது.

* தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற தேர்வரைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக் கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் கூடவே கூடாது.

* தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும், தாமே கோடிட்டு அடித்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக் கூடாது.

* தேர்வர்கள் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x