Published : 25 Feb 2020 08:43 AM
Last Updated : 25 Feb 2020 08:43 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 7-வது முறையாக நீட்டிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்து சர்ச்சை எழுந்ததால் விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துத் தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த ஆணையம், 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அவ்வப்போது விசாரணைக்குக் கால அவகாசம் கோரப்பட்டதால், இதுவரை 6 முறை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, சசிகலா தரப்பு உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரம் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

கடந்த 10 மாதங்களாக தடை நீடிக்கும் நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் நேற்றுடன் (பிப்.24) நிறைவடைந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 24-ம் தேதி வரை கால அவகாசத்தை 7-வது முறையாக நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x