Published : 25 Feb 2020 07:29 AM
Last Updated : 25 Feb 2020 07:29 AM

வேளாங்கண்ணி கடற்கரையில் ஒதுங்கிய மரப்பெட்டியில் போதைப்பொருள்

நாகை மாவட்டம் செருதூர் கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கிய மரப்பெட்டி.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய மரப்பெட்டியில் போதைப் பொருளான ஹெராயின் இருந்தது தெரியவந்தது.

செருதூர் கடற்கரையில் மரப்பலகையால் செய்யப்பட்ட பெட்டி ஒன்று கடலில் மிதந்து வந்து நேற்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த மீனவர்கள் கடலில் மர்ம பெட்டி மிதந்து வந்ததாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஹெராயின் கடத்தல்

இதையடுத்து, விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மரப்பெட்டியைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், போதைப் பொருளான ஹெராயின் பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மரப்பெட்டியை சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மரப்பெட்டியை பெற்றுக்கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள், மரப்பெட்டி எங்கிருந்து வந்தது? என்று விசாரித்து வருகின்றனர்.

போதைப்பொருளின் மதிப்பு என்ன என்பது குறித்து திருச்சியில் இருந்து உயரதிகாரிகள் வந்து விசாரித்த பின்னரே தெரியவரும் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவே முதல் முறை

மேலும், மரப்பலகையால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து ஹெராயின் கடத்துவது இப்பகுதியில் இதுவே முதல் முறை என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x