ஏரி, குளங்களில் உயிரிழப்புத் தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

ஏரி, குளங்களில் உயிரிழப்புத் தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Updated on
1 min read

ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மார்ச் 9-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உயிரிழப்பைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்துப் பதிலளிக்க இந்து சமய அறநிலயத்துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் குளங்களில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்டந்தோறும் ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மார்ச் 9-க்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும், அறிக்கை தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து, விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in