ஜெ., பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

ஜெ., பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மணிமாறன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், " நான் அதிமுக கட்சியின் சிவகங்கை மாவட்ட மாணவரணி பொருளாளராக உள்ளேன்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 11 ஆண்டுகளாக தமிழக முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளார். 1984 முதல் 1989 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தனது தனித்துவமான குணங்களால் உலகின் மிகச்சிறந்த தலைவராக இருந்துள்ளார். தமிழகத்திற்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்களைக் குறிப்பாக மழைநீர் சேகரிப்புத் திட்டம், தொட்டில் குழந்தைகள் திட்டம் உள்பட பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கொண்டு வந்துள்ளார்.

அரசியலில் முழு ஈடுபாட்டுடன் பயணித்த செல்வி ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் கொண்டு வந்தார்.

அவரின் சிறப்பான செயல்களைப் பாராட்டி உக்ரைனில் உள்ள உலக மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு "தங்கத்தாரகை" எனும் விருதை 2004ல் வழங்கி கவுரவித்தது.

அவரின் சிறப்பான நிர்வாகத் திறன்களைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஈடு செய்ய இயலாத, ஒப்பற்ற தலைவரான செல்வி ஜெயலலிதாவை உலகின் பல்வேறு தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.

கடந்த 2016 டிசம்பர் 5ல் அவர் இறந்தார். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன், "மனுதாரர் செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று என்பதைத் தவிர வேறு பொருத்தமான காரணங்கள் இன்றி வழக்கை தொடர்ந்துள்ளார். ஆகையால் மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது" எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in