Published : 24 Feb 2020 12:21 PM
Last Updated : 24 Feb 2020 12:21 PM

‘இந்து தமிழ் திசை’ - ராம்ராஜ் காட்டன் - பள்ளிக்கல்வித் துறை வழங்கிய ‘அன்பாசிரியர் விருது’- ஆசிரியருக்கான பெருமை இன்னும் குறையவில்லை: கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சி

திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்த விழாவில் அன்பாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ராதாகிருஷ்ணன், ’இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் உள்ளிட்டோர்.

திருப்பூர்

ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழகத்தில் இன்னும் குறையவில்லை என திருப்பூரில் நடந்த ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ராம்ராஜ் காட்டன், ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அன்பாசிரியர் விருது’ வழங்கும் விழா திருப்பூரில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்றுவிடாமல், திறமை, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி, பள்ளியையும் மேம்படுத்திவரும் ஆசிரியர்கள் பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல் உள்ளனர். அத்தகைய ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘அன்பாசிரியர்’ என்ற விருதை வழங்குகிறது.

இவ்விருதுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்களின் செயல்பாடுகள் பற்றிய விவரத்தொகுப்பை ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பியிருந்தனர். மூத்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு, விவரத் தொகுப்புகளைப் பரிசீலனை செய்தது. இதையடுத்து தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒருவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 38 பேர் அன்பாசிரியர் விருதுக்கு தேர்வாகினர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா, திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சிபாரிசுக்கு இடமில்லை

‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் தலைமை வகித்து பேசும்போது, ‘‘ஆசிரியர் சமூகம் என்பது அன்பு நிறைந்ததுதான். ஆகவேதான் ‘அன்பாசிரியர்’ என்ற பெயரில் விருது வழங்குகிறோம். அன்பாசிரியர் விருதை மனத்தூய்மை, நேர்மையோடு நடுவர்கள் வைத்து, எவ்வித சிபாரிசுக்கும் இடமின்றி தகுதியான ஆசிரியர்களை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். வகுப்பறையை கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றியவர்கள்தான் அன்பாசிரியர்கள். இந்த விருதை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமை கொள்கிறது” என்றார்.

சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்களிடம் அன்போடு பணி செய்தால் மட்டுமே அனைவரது அன்பையும் பெற முடியும் என்பதை, இங்குவிருது பெற்ற ஆசிரியர்கள் நிரூபித்துள்ளனர். விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சிறப்புகளை பார்த்தபோது வியந்து போனேன். கிராமப் பகுதிகளில் பள்ளிகளைஆசிரியர்கள் வழிநடத்தி செல்வதை காணும்போது உண்மையில் உளப்பூர்வமாக ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழகத்தில் இன்னும் குறையவில்லை என்பதைஉணர முடிகிறது. மாற்றுத் திறனாளி ஆசிரியை ஒருவர் செய்துள்ள பணியை பார்க்கும்போது, ஆசிரியர்கள் எல்லோராலும் எல்லாம் செய்ய இயலும்.

வகுப்பறை கட்ட நிதி

விருது பெற்ற ஆசிரியர் ஒருவர், பள்ளியில் வகுப்பறைகள் தேவை என்றார். விரைவில் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். சிறந்த ஆசிரியர்கள் தங்களது பணிகளை செய்ய, இதுபோன்ற குறைபாடுகள் வரக் கூடாது. ஆசிரியர்களுக்கு இந்த அரசுஎப்போதும் உறுதுணையாக இருக்கும்.இந்த அரசு பொறுப்பேற்ற பிறகே வெளிப்படையாக பணிமாறுதல் நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வாணையத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆசிரியர்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு உறுதுணையாக இருப்பேன். ஆசிரியர்கள், சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள். சமூகம்மட்டுமல்ல, நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்புக்கு இடம் உண்டு.இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளோம். 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களை அழைத்து பாராட்டினோம். இன்றைக்கு ‘இந்து தமிழ் திசை’ அன்பாசிரியர் விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இதுபோன்ற நல்ல நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ள ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வாழ்த்துகள்” என்றார்.

விழாவில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்எல்ஏக்கள் ஏ.நடராஜன், எஸ்.குணசேகரன், கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் முத்துராமன், எஸ்.எம்.சில்க்ஸ் உரிமையாளர் மனோகர், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாகி அருண், ‘இந்துதமிழ் திசை’ பொது மேலாளர் ராஜ்குமார்,வணிகப் பிரிவு தலைவர் சங்கர் சுப்பிரமணியன், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் எக்ஸ்லான் கி.ராமசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

நூல் வெளியீடு

‘இந்து தமிழ் திசை’ யின் இணையதளப் பிரிவு முதுநிலை உதவி ஆசிரியர் க.சே.ரமணி பிரபாதேவி எழுதிய, ‘அன்பாசிரியர்’ புத்தகத்தை, அமைச்சர்கள் வெளியிட்டனர். இதையடுத்து இணைய தொடரால் அடையாளம் காணப்பட்ட முன்னோடி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சங்க இலக்கியத் தமிழ்ப் பாடல்களை நவீன முறையில் இசையமைத்து ஜேம்ஸ் வசந்தன் தன் குழுவினருடன் அரங்கேற்றிய சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவை லட்சுமி செராமிக்ஸ், எஸ்.எம். சில்க்ஸ், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி, கல்யாண் ஜூவல்லர்ஸ், நியூஸ் 7ஆகியவை இணைந்து வழங்கின.

‘அன்பாசிரியர் - 2020’ விருது பெற்ற ஆசிரியர்கள்

1. டி.கீதா, கர்நாடகா சங்க மேல்நிலைப் பள்ளி, சென்னை.

2. டி.ஜே.நாகேந்திரன், சூரிய நகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவள்ளூர்.

3. சுரேந்திரன், மாதவாலயம் அரசு மேல்நிலைப் பள்ளி, கன்னியாகுமரி.

4. அண்ணல் அரசு, மேட்டுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

5. கஜபதி, குன்னாங்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.

6. லதா, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ராணிப்பேட்டை.

7. பொன் வள்ளுவன், பத்தலபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வேலூர்.

8. எம்.தங்கராஜ், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தென்காசி.

9. நெல்சன் பொன்ராஜ், பண்டாரப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி, தூத்துக்குடி.

10. சுந்தரமூர்த்தி, கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.

11. ஜெயசுந்தர், அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி, புதுச்சேரி.

12. சத்தியமூர்த்தி, மோப்புக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

13. ஹேம்குமாரி, பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடலூர்.

14. என்.சிவகுமார், ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம்.

15. பி.முருகன், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால்.

16. பி.மரிய ஜோசப், காங்கியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விழுப்புரம்.

17. டி.சூரியகுமார், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி, திருவாருர்.

18. விஜயலட்சுமி, கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.மலை.

19. விநாயகமூர்த்தி, மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளி, சிவகங்கை.

20. தமிழினி ராமகிருஷ்ணன், அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

21. கருணைதாஸ், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

22. சி.வீரமணி, கெரிகேபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிருஷ்ணகிரி.

23. அன்பரசி, டி.கே.ஆர். நடுநிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

24. ஆர்.சுரேஷ், மலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

25. விஜயகுமார், சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி.

26. ஆர்.சீலா, பொம்மனம்பட்டி அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி, பெரம்பலூர்.

27. தென்னவன், கொண்டபெத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மதுரை.

28. கே.நரசிம்மன், உம்மியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தருமபுரி.

29. செந்தில்குமார், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேனி.

30. ஹெச்.புஷ்பலதா, இடைமலைபட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருச்சி.

31. புவனேஷ்வரி, கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, திண்டுக்கல்.

32. எஸ்.கலையரசி, காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம்.

33. ஜே.ராம்ராஜ், அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

34. டி.புஷ்பா, கரன்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நீலகிரி.

35. பூபதி, பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கரூர்.

36. வி.வெங்கடேஸ்வரன், திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.

37. பி.சுகுணாதேவி, ஒன்னிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோவை.

38. கண்ணபிரான், ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x