ஏடிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்ட மதுரை ஆணையர் பதவி

ஏடிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்ட மதுரை ஆணையர் பதவி
Updated on
1 min read

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை நகர காவல் ஆணையர் பதவி அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகரம் ஏடிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக நேற்று தமிழக உள்துறைச் செயலர் அறிவித்தார். சமீபத்தில் ஐஜியாக இருந்து ஏடிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டவர்களுக்கும், டிஜிபிக்களுக்கும் இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் மட்டும் காவல் ஆணையர் பதவி ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்தது. இது தவிர திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, திருப்பூர், சேலம் ஆகிய காவல் ஆணையர்கள் பதவி ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளால் நிரப்பப்பட்டது.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்து மதுரை காவல் ஆணையர் பதவியும் ஏடிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாநகரங்களும் ஏடிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட வாய்ப்புண்டு. இதேபோன்று சிறைத்துறை ஐஜி பதவியும் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் பதவியும் டிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட வாய்ப்புண்டு. இதற்கு முன் காவல் ஆணையர் ஜார்ஜ் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும்போது சென்னை காவல் ஆணையராகப் பதவி வகித்தார்.

தற்போது தமிழக காவல்துறை இடமாற்றம் வருமாறு:

''ஆவின் பிரிவு கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த சுனில்குமார் டிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு காவலர் தேர்வாணைய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி சுனில்குமார் சிங் டிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு சென்னை சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை ஏடிஜிபி ஆபாஷ் குமார் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையர் பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையர் பதவி, ஏடிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இவர் மதுரை காவல் ஆணையராகத் தொடர்கிறார்.

சென்னை காவலர் நலன் ஐஜியாகப் பதவி வகித்த சேஷசாயி ஏடிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்''.

இதற்கான உத்தரவை நேற்றிரவு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்தார்.

மேலும் பல எஸ்.பி.க்கள் டிஐஜிக்களாகவும், டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும் பதவி உயர்த்தப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in