Published : 24 Feb 2020 10:46 AM
Last Updated : 24 Feb 2020 10:46 AM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது; புதிய மருத்துவக் கல்லூரியை கடலூரில்தான் தொடங்க வேண்டும்; வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும்; அதை மாற்றக் கூடாது என, தமிழக அரசை மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (பிப்.24) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளுள் ஒன்றான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், லட்சக்கணக்கான மாணவர்களைப் பயிற்றுவித்து, பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, உலகளவில் தமிழகத்திற்கு மதிப்பைத் தேடித்தந்த கல்விக்குழுமம் ஆகும்.

தந்தை பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களை அழைத்துப் பேச வைத்துப் பெருமை சேர்த்து, மாணவர்கள் இடையே பகுத்தறிவுக் கொள்கைகள் வேர் ஊன்றச் செய்தது, திராவிட இயக்கத்தின் நாற்றங்காலாகத் திகழ்ந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான் என்றால் அது மிகையாகாது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகதத்தில் அண்ணா ஆற்றிய பல சொற்பொழிவுகள்தான், மாணவர்கள் இடையே அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது; மொழி உணர்வை விதைத்தது, மொழிப்பற்றை வளர்த்தது. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் களம் அமைத்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான்.

தமிழ் மொழியையும், தமிழ் இசையையும் வளர்ப்பதற்கு, அண்ணாமலை அரசரைப் போல் ஆதரவு அளித்தவர்கள் எவரும் இல்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள்தான், இன்றைக்குத் தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக, பல்துறை விற்பன்னர்களாக மிளிர்கின்றார்கள். தமிழகம் முழுமையும் கல்லூரிகளில் பேராசிரியர்கள், முதல்வர்கள், துணைவேந்தர்கள் எனப் பொறுப்பு வகித்து, கல்வித்துறையை மேம்படுத்தி வருகின்றார்கள்.

உறவினர்கள் மற்றும் நகரத்தார் சமூகத்தவர் எல்லோரும், கல்லூரியை மதுரையில்தான் நிறுவ வேண்டும் என வலியுறுத்தியபோதிலும், அண்ணாமலை அரசர், சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியை நிறுவினார். அதுவே, 1929 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருப்பெற்றது. அதன் விளைவாகவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருக்கின்றார்கள். தமிழகத்தில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் பெருந்துணையாக இருந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

பல்வேறு காரணங்களைக் கூறி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசு எடுத்துக்கொண்டது. அப்போது அங்கே 12 ஆயிரத்து 582 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களுள், 5,000-க்கும் மேற்பட்டவர்களைத் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பணி இடமாற்றம் செய்து விட்டனர்.

செட்டிநாட்டு அரசரின் பொறுப்பில் இருந்தபோது, பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மானியம் ஆண்டுக்கு 60 கோடிதான். ஆனால், அப்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய். எத்தனையோ சோதனைகளுக்கு இடையில் அந்தப் பல்கலைக்கழகத்தை நடத்தி வந்தார்கள்.

இப்போது, பல்லைக்கழக மானியக்குழு வழங்குகின்ற நிதி உதவி ஆண்டுக்கு ரூ 225 கோடி. ஆயினும், வேலைவாய்ப்புகளைக் குறைத்து விட்டனர். இப்போது அங்கே 7,100 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

அண்ணாமலை அரசருக்கு அடுத்து, பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகப் பொறுப்பு வகித்த ராஜா முத்தையா, பல்வேறு துறைகளைத் தொடங்கினார். அயல்நாடுகளில் இருந்தும் பேராசிரியர்களை வரவழைத்துப் பணியில் அமர்த்தினார். ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவை, பின்னர் அவரது மகன் எம்.ஏ.எம்.ராமசாமி இணைவேந்தராகப் பொறுப்பு வகித்த காலத்தில், 1985 ஆம் ஆண்டு நிறைவேற்றினார்கள். தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக ஆக்கினார். முதுகலைப் பட்ட வகுப்புகளையும் தொடங்கினார். இன்று, அதிக அளவில் முதுகலை மாணவர்கள் அங்கேதான் படித்து வருகின்றனர். ராஜா சர் முத்தையாவின் பெயரால் இயங்கி வருகின்ற அந்த மருத்துவக் கல்லூரியையும் தமிழக அரசு எடுத்துக்கொண்டது.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையைத் தமிழக அரசு வகுத்துச் செயல்பட்டு வருகின்றது. அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக, அங்கே ஏற்கெனவே ஒருமுறை அடிக்கல் நாட்டப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத் தலைநகரங்களில்தான், அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி இருக்கின்றது. ஆனால், கடலூர் மாவட்டத்தில் மட்டும், ஒரு வட்டத் தலைநகரான சிதம்பரத்தில் இயங்கி வருகின்ற ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப் போவதாக. சட்டப்பேரவையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சியில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி என்ற பெயர்களில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பது போல், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதை மாற்றக் கூடாது.

மேலும், கடலூர் மாவட்டத்திற்கhன புதிய மருத்துவக் கல்லூரியை, மாவட்டத் தலைநகரான கடலூரில்தான் தொடங்க வேண்டும். அதன்மூலம், கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.

அதற்கு மாறாக, செட்டிநாட்டு அரசரின் பெயரையும், புகழையும் மறைக்கின்ற முயற்சியை ஏற்றுக்கொள்ள இயலாது; எந்தக் காரணத்தைக் கொண்டும், ராஜா முத்தையாவின் பெயரை நீக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்துகின்றேன். அத்தகைய முடிவினை அரசு மேற்கொண்டால், மதிமுகவின் சார்பில் சிதம்பரத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும்" என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x