

கடலூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 4 இடத்தில் சோதனைகடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காஜாமொய்தீன், ஜாபர் அலி, அப்துல் சமது ஆகியோர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு டெல்லியில், டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளுமேட்டில் உள்ள காஜாமொய்தீனின் 3-வது மனைவியின் வீடு, நெய்வேலி 7-வது வட்டத்தில் உள்ள முதல் மனைவியின் வீடு மற்றும் நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஜாபர் அலி வீடு, பரங்கிப்பேட்டை அப்துல்சமது வீடு ஆகிய 4 இடங்களிலம் இன்று (பிப்.24) அதிகாலையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 4 இடங்களிலும் 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, சேலம் முகமது புறா பகுதியில் உள்ள அப்துல் ரகுமான் என்பவரின் வீட்டில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவியவர்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்ததாகக் கூறி, அப்துல் ரகுமான் 2 மாதத்திற்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் 3 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.