

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரி 8-ம் தேதி பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டன. தவுபீக், அப்துல் ஷமீம் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, டெல்லி, மகாராஸ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் இவ்வழக்கு ஏற்கெனவே என்ஐஏவு-க்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீஸார், என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு வாரம் முகாமிட்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.