Published : 24 Feb 2020 08:15 AM
Last Updated : 24 Feb 2020 08:15 AM

சென்னை கோயம்பேட்டில் ஓட்டல் தொழிலாளியை கொலை செய்த ரவுடி கைது

சென்னை

தாயிடம் தவறாக பேசி வந்ததாக ஓட்டல் தொழிலாளியை ரவுடி ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோயம்பேடு, நியூ காலனி, வலதுபுறம் கூவம் ஆற்றில் நேற்று முன்தினம் காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி தனசேகர் (42) என்பதும் இவரை கோயம்பேடு புதிய காலனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கொலை செய்து ஆற்றில் வீசியதும் தெரியவந்தது.

ஜெயக்குமாரை கைது செய்துள்ளதாகவும் அவரது கூட்டாளியான கார்த்திக் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஜெயக்குமார் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் கொலை செய்யப்பட்ட தனசேகருக்கும் சில நாட்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமார் தனக்கு செல்போன் இல்லாததால் தனது தாயாரின் செல்போன் நம்பரை தனசேகருக்கு கொடுத்துள்ளார்.

இதை பயன்படுத்திக் கொண்ட தனசேகர், போனில் ஜெயக்குமார் தாயிடம் தவறான கண்ணோட்டத்துடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த ஜெயக்குமார் தனது நண்பருடன் சேர்ந்து தனசேகரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x