Last Updated : 24 Feb, 2020 07:43 AM

 

Published : 24 Feb 2020 07:43 AM
Last Updated : 24 Feb 2020 07:43 AM

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு சுயஉதவி குழு: விவரம், செயல்பாடுகளை மின்னணு முறையில் பதிய ‘இ-சக்தி’ திட்டம்- விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்

சென்னை

சுயஉதவிக் குழுக்களின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்களை மின்னணுமயமாக்கி பராமரிப்பதற்கு வசதியாக இ-சக்தி என்ற திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

சுயஉதவிக் குழுக்களின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்களை மின்னணு மயமாக்கி பராமரிப்பதற்கு வசதியாக இ-சக்தி என்ற திட்டம் கடந்த2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம்ராம்கர்க் மற்றும் மகாராஷ்டிர மாநிலம்துலே ஆகிய 2 நகரங்களில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டது.

பின்னர், 2016-ம் ஆண்டு இத்திட்டம் மேலும் 23 மாவட்டங்களுக்கும், 2017-ம்ஆண்டு 75 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, நாடு முழுவதும்22 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 200 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம், 4.5 லட்சம் சுயஉதவிக் குழுக்களின் அனைத்து விவரங்களும் மின்னணுமயம் ஆக்கப்பட்டுள்ளன.இதன்மூலம், கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழைகள் 54 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது: ஆண்கள், பெண்கள் கூட்டாக இணைந்து தொழில்செய்து வாழ்க்கையில் முன்னேறுவதற்காக சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கப்படுகிறது.

ஆனால், இக்குழுக்களின் செயல்பாடுகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், வெளிப்படைத்தன்மை இல்லாததாலும் அவர்களுக்கு கடன் வழங்குவதிலும், வழங்கப்பட்ட கடனை திரும்ப வசூலிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இ-சக்தி என்ற திட்டம் நபார்டு வங்கிமூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, இசக்தி என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சுயஉதவிக் குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள், செய்யும் தொழில், வங்கியில் வாங்கியுள்ள கடன், மாதம்தோறும் செலுத்தும் சந்தா தொகை, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும்.

அதேபோல், ஒவ்வொரு குழுவும் மாதம்தோறும் நடத்தும் அனைத்துக் கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வேண்டும் என்றால் அவர்கள் முன்புபோல வங்கிக்குச் சென்று பல நாட்கள் காத்திருக்க அவசியமில்லை.

இந்த இணையதள பக்கத்தில் பதிவு செய்தால் போதும். வங்கி மேலாளர்களே அவற்றை ஆய்வு செய்து அவர்களது இருப்பிடத்துக்கு நேரில் சென்று கடன் வழங்குவர். சுயஉதவிக் குழுக்கள் கடன்பெறுவது, அவற்றை முறையாக திருப்பிசெலுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளைப் பொறுத்து இந்த இணையத்தில் குழுக்களுக்கு தர மதிப்பீடு வழங்கப்படும். அதன் அடிப்படையில் வங்கிகள்எளிதாக கடன் வழங்க முடியும்.

அதேபோல, உறுப்பினர்களிடம் இருந்து குழுத் தலைவர் வசூலிக்கும் சந்தா மற்றும் கடன்தொகையை வங்கியில் செலுத்தினால் அக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும். இதன்மூலம், வசூலித்த பணத்தை குழுத் தலைவர் கையாடல் செய்வது தடுக்கப்படும். உறுப்பினர்களும் கடன் பெற்றுவிட்டு அதைத் திரும்ப செலுத்தாமல் ஏமாற்ற முடியாது.

தமிழகத்தில் இ-சக்தி திட்டம், தமிழக அரசு மகளிர் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து முதல்கட்டமாக திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், நாகை மாவட்டங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x