Published : 23 Feb 2020 04:15 PM
Last Updated : 23 Feb 2020 04:15 PM

கருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் 

கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது. திமுகவின் உண்மை முகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு வராது என முதல்வர் உறுதியளித்துள்ளார். அரசு சிறுபான்மையினருக்காக உத்தரவாதத்தையும் உறுதியையும் தைரியத்தையும் கொடுத்துள்ளது. எனவே, இதனை உணர்வுபூர்வமாக உணர்ந்துகொண்டு இஸ்லாமியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அப்படிப் போராட்டத்தைக் கைவிடுவதுதான் நல்ல விஷயம்.

ஆனால், இதில் குளிர் காய நினைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. திமுக, கழுகு பார்ப்பதைப் போல முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் கொத்திக்கொண்டு போக வலை வீசுகிறது. அதற்கு யாரும் இரையாகக்கூடாது என்பதுதான் என் கருத்து'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுகவுக்கான மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என்றும், சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிஏஏ குறித்து முதல்வரும் துணை முதல்வரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்த சூழலில் ஸ்டாலினுக்குப் பதில் தரும் வகையில் மக்களை மதரீதியில் பிரிக்கிறது திமுக என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து சிஏஏ விவகாரத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x