Published : 23 Feb 2020 12:30 PM
Last Updated : 23 Feb 2020 12:30 PM

விண்வெளி மையத்துக்குச் செல்லும் மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் உதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக அபிநயாவிற்கு ரூ.2 லட்சம் நிதி; 9-ம் வகுப்பு மாணவி அபிநயாவிற்கு தமிழக அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்து எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, இந்தியா முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கு இணையம் வாயிலாக நடத்திய அறிவியல் தேர்வில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு படித்து வரும் செல்வி அபிநயா (த/பெ திரு. வெங்கடாசலம்) என்ற பள்ளி மாணவி பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி செல்வி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியாகும். விண்வெளித்துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி செல்வி அபிநயா கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித் துறையில் இதுபோன்று பற்பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமெனவும் இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதையொட்டி, செல்வி அபிநயாவின் சாதனையினை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும், செல்வி அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதியினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x