Published : 23 Feb 2020 07:52 AM
Last Updated : 23 Feb 2020 07:52 AM

சாஸ்த்ரா பல்கலை.க்கு சர்வதேச தர அங்கீகாரம்- இங்கிலாந்தின் ஐஇடி நிறுவனம் வழங்கியது

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 12 பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு இங்கிலாந்தின் பொறியியல், தொழில்நுட்ப நிறு வனத்தால் (IET) உயர்ந்தபட்ச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஐஇடி நிறுவனத்தின் அங்கீகாரம், உலக அளவில் தர நிர்ணயத்துக்கு பெயர்பெற்றது. சாஸ்த்ரா நிகர் நிலைபல்கலைக்கழகம் தனது தஞ்சாவூர், கும்பகோணம் வளாகங்களுக்காக 2015-ல் இந்த அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்தது.

இதைத் தொடர்ந்து, சாஸ்த்ராவின் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், கெமிக்கல், பயோடெக்னாலஜி உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளுக்கு 9 ஆண்டுகளுக்கு (2020-2028) அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ராவின் நிவாச ராமானுஜன் மையத்தில் நடத்தப்படும் படிப்புகளுக்கும் பொருந்தும்.

இது சாஸ்த்ராவின் பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பதோடு, இந்த 9 ஆண்டு காலத்துக்கு இந்தபல்கலைக்கழகத்தில் இருந்துபட்டம் பெறும் மாணவர்களுக்கும் நேரடி பயனைத் தரும். உலக அளவில் வேலைவாய்ப்புக்கும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியில் சேர்வதற்கும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் இது பெரிதும் பயன்படும். இதன்மூலம், ஐஇடி-யின் 85-க்குஅதிகமான உலகளாவிய கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சாஸ்த்ராவும் இடம்பிடிக்கிறது.

இந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக பார்வையிட வந்த ஐஇடி குழு தலைவர் பேராசிரியர் ரிச்சர்டு மூர்லிங் கூறும்போது, ‘‘உலகத் தரத்தில் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக சாஸ்த்ரா நிறுவனம் மேற்கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

ஐஇடி அங்கீகாரத்துக்கான சாஸ்த்ரா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.சுவாமிநாதன் கூறும்போது, ‘‘12 படிப்புகளுக்கு 9 ஆண்டுஅங்கீகாரம் என்பது சாஸ்த்ராவுக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி. இது உயர்கல்விக்கு நாங்கள்கொடுத்து வரும் முன்னோடி அணுகுமுறைக்கு கிடைத்த பயன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x