Published : 23 Feb 2020 07:30 AM
Last Updated : 23 Feb 2020 07:30 AM

சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் சுங்கத் துறை அதிகாரிகளைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர்கள் சிக்குகிறார்கள்

சென்னை

விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தி வந்தவர்களுக்கு உதவிய வழக்கில், சுங்கத் துறை அதிகாரிகளைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர்களும் சிக்குகின்றனர்.

சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 19-ம் தேதி துபாய், மலேசியா மற்றும் கொழும்புவில் இருந்து வந்த விமானங்களில் பயணித்தவர்களின் உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது 18 பயணிகள் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.5.40 கோடி மதிப்புள்ள 12.693 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வெளியே அனுப்பிய பின்னரே, அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி பிரித்விராஜன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். எனவே இதில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து தங்கம் கடத்தி வந்த 18 பேரையும் தி.நகரில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்காக விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

அப்போது அங்கு வந்த கடத்தல்காரர்களின் நண்பர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 18 பேரும் தப்பி ஓடினர். இதனால் அவர்களை கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் புகார் செய்தனர். தப்பி ஓடியவர்களின் பாஸ்போர்ட் விவரத்தை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தப்பி ஓடிய கடத்தல்காரர்களான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த இம்ரான் நசீர், ரகுமான், ஆஷிக், ஷேக் அப்துல்லா, முகமது நஜிபுல்லா, சையது முகமது, சையது ஜாபர், சிவகங்கை இளையான்குடியைச் சேர்ந்த காதர் மொய்தீன், திலீப்குமார், திருச்சி அஸ்கர் உசேன், சென்னை திருவல்லிக்கேணி சிக்கந்தர், முகமது, சையது, அப்துல்லா ஆகிய 14 பேர் கைதானார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கம் கடத்தி வந்ததில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விமான நிலையத்தில் சுங்கத்துறை ஆய்வாளர்களாக பணிபுரிந்த விகாஷ்குமார், ராஜன், ஓய்வுபெற்ற சுங்க அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் தங்கக் கடத்தலுக்கு உதவி செய்த சுங்கத் துறை அதிகாரிகள் சிக்கியிருப்பது, கடத்தல் தங்கம் வாங்கும் பிரபல நகைக்கடை உரிமையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் சில நகைக்கடைக்காரர்களின் பெயர்களை அவர்கள் சொன்னதாகவும், அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x