Published : 23 Feb 2020 07:24 AM
Last Updated : 23 Feb 2020 07:24 AM

ஒரு வருடம் விடுப்பு கோரியவருக்கு கட்டாய ஓய்வு- மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உத்தரவு ரத்து

மகளைக் கவனிப்பதற்காக ஒரு வருடம் விடுப்பு கோரியவருக்குகட்டாயப் பணி ஓய்வு வழங்கிய மத்திய ரிசர்வ் படையின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய சுபா, உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகளை கவனிக்க ஓராண்டு விடுப்பு வழங்கக் கோரி, உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தார்.

இக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சுபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, அவருக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் சுபா மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சுபா கோரிக்கையை ஏற்று 11 மாதங்கள் விடுப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முன், அனுமதியின்றி ஒரு மாதம் விடுப்பு எடுத்ததாகக் கூறி, சுபாவுக்கு கட்டாய ஓய்வு வழங்கி 2014-ம் ஆண்டு சிஆர்பிஎப் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுபா, உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், கட்டாய பணி ஓய்வு வழங்கியதுடன், ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து பிறப்பித்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, சுபாவின் கட்டாய ஓய்வு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், சுபாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், முழுமையாக விசாரணை நடத்தி, 12 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் சிஆர்பிஎப் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x