Published : 22 Feb 2020 12:45 PM
Last Updated : 22 Feb 2020 12:45 PM

ஐசிஎஃப்பில் சோகம்: சிவராத்திரிக்கு கண்விழித்த மூதாட்டி மாடியிலிருந்து தவறி விழுந்து பலி

சென்னை ஐசிஎஃப்பில் சிவராத்திரியை முன்னிட்டு கண்விழித்த மூதாட்டி, 3 வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐசிஎஃப் காந்தி நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் 2-வது மாடியில் வசிப்பவர் சங்கர் (48). இவர் கோகோ கோலா கம்பெனியில் சாந்தோம் பகுதியில் டீலராக உள்ளார். இவரது தாயார் ஆழ்வாரம்மாள் (75). இவரும் மகனுடன் அதே வீட்டில் வசிக்கிறார். சங்கரின் மகன் கௌதம் அதே குடியிருப்பில் 3-வது மாடியில் தனியாக வசிக்கிறார்.

நேற்று சிவராத்திரி என்பதால் இரவில் கண்விழித்தல் முக்கியம் என ஆழ்வாரம்மாள் கருதினார். இதனால் தனது மகனிடம் இன்றிரவு முழுவதும் தான் கண் விழித்திருக்கப்போவதாக ஆழ்வாரம்மாள் கூறியுள்ளார். யாருக்கும் தொல்லை கொடுக்க வேண்டாம் என்று மூன்றாவது மாடியில் உள்ள பேரன் கௌதம் வசிக்கும் வீட்டில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார்.

நள்ளிரவு 1.15 மணிக்கு திடீரென மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் ஆழ்வாரம்மாள் உயிரிழந்தார். இதைப் பார்த்து பதறிப்போன மகன் சங்கர் ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். அவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு ஆழ்வாரம்மாள் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎஃப் போலீஸார் ஆழ்வாரம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாடியிலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தது சம்பந்தமாக ஐபிசி 174 (சந்தேக மரணம்) பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x