Last Updated : 22 Feb, 2020 12:05 PM

 

Published : 22 Feb 2020 12:05 PM
Last Updated : 22 Feb 2020 12:05 PM

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரி வழிபாடு: கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சியைக் காணக் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

100 ஆண்டுகளுக்கு மேலாக நள்ளிரவு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சிவராத்தியை முன்னிட்டு முத்தம்மாள் பாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யை எடுத்து பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விடுவர். கடந்த காலங்களில் வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற மூதாட்டிகள் அப்பம் சுட்டனர்.

தற்போது முத்தம்மாள் கடந்த 50 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார் இதற்காக, இவர் கடந்த 40 நாட்கள் விரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

7 ஊர்களுக்குப் பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவர்.

முன்னதாக பாசிப்பயிறு தட்டாம் பயிறு கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும் இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்திக் கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

இங்கு வந்து மஹா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் இன்று வரைக்கும் நடைமுறையில் உள்ள நம்பிக்கையாகும்.

கடந்த 50 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி நேற்றும் வெறும் கையினால் கொதிக்கும் நெயில் அப்பம் சுட்டார். இந்நிகழ்சியை காண்பதற்கு ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x