Published : 24 Aug 2015 10:23 AM
Last Updated : 24 Aug 2015 10:23 AM

தமிழகத்தில் 4 இடங்களில் மயில்கள் சரணாலயம்: தேசிய பறவை அழிவை தடுக்க வனத்துறை திட்டம்

தமிழகத்தில் ரயில்களில் அடிபட்டும், வேட்டைக் கும்பலால் அழிக் கப்பட்டும் மயில்கள் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திரு நெல்வேலி மாவட்டங்களில் மயில்கள் சரணாலயம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு, தினமும் 87 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் வடமாநிலங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சரக்கு ரயில் கள் மூலம் அதிகளவில் வருகின் றன. இந்த ரயில்களில் கொண்டு வரப்படும் கோதுமை, அரிசி, மதுரை- திண்டுக்கல் இடையேயான மலைப்பகுதி தண்டவாளத்தில் வழிநெடுக சிதறுகின்றன.

திண்டுக்கல் அருகே வட மதுரை, வாடிப்பட்டி, எரியோடு, அய்யலூர் மற்றும் பழநி பகுதிகளில் அதிகளவில் மயில்கள் நடமாடுகின்றன. இந்த மயில்கள், தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கும் கோதுமையை உண்கின்றன. அப்போது ரயில் வருவதை அறியாமல் ரயில் என்ஜினில் அடிபட்டு மயில்கள் இறக்கின்றன.

இறந்த மயிலை ரயில்வே போலீஸார் மீட்டு வனத்துறை யினரிடம் ஒப்படைப்பதும், மீண்டும் மயில்கள் அடிபட்டு இறப்பதும் திண்டுக்கல் மாவட்டத்தில் வழக் கமான நிகழ்வாகிவிட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும், பதினைந் துக்கும் மேற்பட்ட மயில்கள், மதுரை-திண்டுக்கல் இடையே அடிபட்டு இறந்துள்ளன. பல மயில்கள் காயமடைந்து மீட்கப் பட்டு வனத்துறையினரிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மயிலுக்கு கோதுமை மிகவும் பிடித்தமான உணவு. சரக்கு ரயிலில் இருந்து தண்டவாளத்தில் சிதறும் கோதுமை, அரிசியை சாப்பிட்டு பழக்கப்பட்ட மயில்கள், ஆபத்தை உணராமல் மீண்டும் மீண்டும் இப்பகுதிக்கு வருகின்றன. தற்போது வெளிமாவட்டங்களில் இருந்தும் மயில்கள் இங்கு வர ஆரம்பித்துள்ளன. அதனால், உடனடி நடவடிக்கையாக ரயில் களின் வேகத்தை இப்பகுதிகளில் குறைக்க ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்த உள்ளோம். மயில்கள் மற்ற பறவைகளைப்போல சட் டென்று வேகமாக பறந்து செல் லாது. ரயில் நெருங்கி வந்துவிட் டால், அதனால் வேகமாக பறக்க முடியாமல் என்ஜினில் அடிபட்டு இறக்கின்றன.

மயில்களில் இந்திய மயில்கள், பசுமை மயில்கள் என இரு வகைகள் உள்ளன. மயில்கள் பற்றிய கணக்கெடுப்பு இந்தியாவில் மேற்கொள்ளப்படாததால் அவற் றின் சரியான எண்ணிக்கை இல்லை.

மயில்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இந்திய வன விலங்கு ஆராய்ச்சி நிலையம் வலியுறுத்தி வருகிறது என்றார்.

சரணாலயம் அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்தியாவில் கர்நாடகத்தில் பங்கபூர், ஆதிசிந்தனகிரி ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிரத்தில் நெய்கானிலும் மயில்கள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் இறைச்சிக்காகவும், இறக்கைகளுக்காகவும் மயில்கள் வேட்டையாடப்படுகின்றன. ஒரு செட் மயில் இறக்கை 8 முதல் 10 டாலர் வரை (ரூ. 530 முதல் ரூ. 660 வரை) விற்கப்படுகிறது. மயில்களின் தோலில் இருந்து கிடைக்கும் எண்ணெய், மருத்துவ குணமுள்ளது எனக் கூறி விற்கப்படுகிறது. அதனால், மயில்கள் இனம் தமிழகத்தில் வேகமாக அழிந்து வருகிறது.

1972-ம் ஆண்டு வனவிலங்கு சட்டப்படி, இந்திய தேசிய பறவையாக மயில் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பறவையினத்தை பாதுகாக்க அவற்றின் எண்ணிக்கை அதிகமுள்ள திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மயில்கள் சரணாலயங்களை அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

ஆனால், சரணாலயம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ள காடுகளின் நடுவே தனியார் நிலங்கள் உள்ளதால் சரணாலயம் அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மயில்கள் பொதுவாக வறட்சி மிகுந்த பகுதியிலேயே வசிக்கின்றன. அப்பகுதியிலேயே அவற்றுக்கு மிகவும் பிடித்தமான பல்லி, தவளை, தானியங்கள் உள்ளிட்ட உணவுகள், வெப்பம் மிகுந்த வாழ்விடமான திறந்தவெளிக் காடுகள், புல்வெளிகள் உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x