Published : 22 Feb 2020 08:40 AM
Last Updated : 22 Feb 2020 08:40 AM

அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல்; பட்டினப்பாக்கம் - பெசன்ட்நகர் சாலையை சீரமைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அடையாறு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பட்டினப்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் வரை உள்ள சாலையை சீரமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்தி, கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஏற்கெனவே ஆஜராகி, ரூ.27.04 கோடி செலவில் மெரினா கடற்கரை பகுதியில் 900 நடமாடும் கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் பகுதியில் ரூ.66 லட்சத்தில் தற்காலிக மீன் விற்பனை அங்காடி அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தெற்குப்பகுதி போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன், மாநகராட்சி துணை ஆணையர்கள் டி.குமாரவேல்பாண்டியன், பி.என்.தர் ஆகியோர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர்.

அப்போது கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி ‘‘2 ஏக்கரில் தற்காலிக மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது. இதில் அப்பகுதி மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மெரினா கடற்கரையில் 900 நடமாடும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் ஏற்கெனவே கடை நடத்துபவர்களுக்கும், மீதமுள்ளவை புதிதாக கடை நடத்த விரும்புவோருக்கும் குலுக்கல் முறையில் நேர்மையாக ஒதுக்கப்படும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், மீன் அங்காடி தொடர்பாக அப்பகுதி மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அடையாறு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் இருந்து பெசன்ட் நகர் வரை போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பாலம் கடந்த 1970-ல் சேதமடைந்து விட்டது. அந்தப் பாலத்தை செப்பனிட்டால் புதிதாக மாற்று சாலை அமையும். இதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆரா்ய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x