Published : 22 Feb 2020 07:57 AM
Last Updated : 22 Feb 2020 07:57 AM

முதல்கட்டமாக கிளை கமிட்டிகளுக்கான திமுக உட்கட்சி தேர்தல் தொடங்கியது: மார்ச் 10 வரை நடக்கும் என ஆர்.எஸ்.பாரதி தகவல்

சென்னை

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார் குளம் கிராமத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்.

1949 செப்டம்பர் 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்டது. அக்கட்சியில் கிளைச் செயலாளர் முதல் தலைவர் வரையிலான பதவிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

ஓராண்டு காலம்

கிளை, ஒன்றியம், பேரூர், நகர், வட்டம், பகுதி, மாநகர், மாவட்டச் செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, தணிக்கை குழு உறுப்பினர்கள், பொருளாளர், பொதுச்செயலாளர், தலைவர் என்று ஓராண்டு காலத்துக்கும் மேலாக இத் தேர்தல் நடைபெறும். கட்சியின் 14-வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2012-13-ல் நடந்தது.

தற்போது உறுப்பினர் சேர்க்கை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில் 15-வது திமுக உட்கட்சித் தேர்தல் பிப். 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.

88,398 கிளைகள்

முதல்கட்டமாக நடைபெறும் கிளை கமிட்டிகளுக்கான தேர்தலை காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார் குளம் கிராமத்தில் திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி நேற்று காலை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் உட்கட்சித் தேர்தல் இது. தமிழகம் முழுவதும் 88,398 கிளைகளுக்கு இன்றுமுதல் மார்ச் 10-ம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்மூலம் 16 லட்சத்து 88,388 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தியாவிலேயே சிறப்பாகவும் முறையாகவும் தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் கட்சி திமுக மட்டுமே" என்றார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தர், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், திமுக மாணவர் அணிச் செயலாளர் சிவிஎம்பி.எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிளை அமைப்புகளைத் தொடர்ந்து பேரூராட்சி, மாநகர வட்டங்களுக்கும் பின்னர் ஒன்றிய, நகர, மாநகரப் பகுதிகளுக்கும், அதன் தொடர்ச்சியாக மாநகர அமைப்புகள், மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறும். இறுதியாக திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x