Published : 22 Feb 2020 07:47 AM
Last Updated : 22 Feb 2020 07:47 AM

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் 2 ஆசிரியர்கள் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என அறிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக 2 பேரையும் விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களான நாகராஜ் மற்றும் புகழேந்தி ஆகியோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து இருவர் மீதும் செங்கல்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு அவர்கள் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளன. இவர்களின் அத்துமீறல்களினால் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி சாட்சியம் அளித்தாலே போதுமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த 2 ஆசிரியர்களையும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே அவர்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். தண்டனை அறிவிப்புக்காக இருவரும் பிப்.25 அன்று நேரில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x