Published : 22 Feb 2020 07:40 AM
Last Updated : 22 Feb 2020 07:40 AM

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக உயர வேண்டும்: கல்லூரி விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த காலவாக்கம் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி மாணவ, மாணவியருக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். படம்: வேளாங்கண்ணிராஜ்

திருப்போரூர்

இளைஞர்கள் வேவை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வாய்ப்பு அளிப்பவர்களாக உயரவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மொத்தம் 1,009 மாணவ,மாணவியர் பட்டம் பெற்றனர்.

இதில், முதல்வர் பழனிசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் சிறப்புஅழைப்பாளர்களாக பங்கேற்றனர். கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்றுபல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்த 51 பேருக்கு பட்டங்கள், பதக்கங்களை முதல்வர் வழங்கினார்.

முன்னதாக விழாவில் முதல்வர் பேசியதாவது:

தமிழக அரசு உயர்கல்வித் துறையை மேம்படுத்த பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம், கடந்த2011-ம் ஆண்டில் 35 சதவீதமாகஇருந்த உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை, தற்போது 49 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் மாணவர்களுக்கான பல்வேறு வழிகாட்டு கருத்துகளை பாடல்கள் மூலம் தெரிவித்துள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், உழைப்பு மற்றும் நம்பிக்கையை மையக் கருத்தாக விளக்கும் குட்டிக் கதை ஒன்றையும் கூறினார். வறுமை மற்றும் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் மாணவர்கள் உழைக்க வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வாய்ப்பு அளிப்பவர்களாக நீங்கள் உருவாக வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா, சிவநாடார் அறக்கட்டளை அறங்காவலர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, கல்வி நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், தலைமை அலுவலர் கலா விஜயகுமார், கல்லூரி முதல்வர் சாலிவாகனன் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

கண் கலங்கிய முதல்வர்

விழாவின்போது, கல்லூரி நிர்வாகம் சார்பில் முதல்வர் பழனிசாமியின் வாழ்க்கை குறித்து மாணவர்களுக்கு சிறிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த முதல்வர்,அரசுப் பள்ளிக்கு நாள்தோறும் நடந்து சென்று கல்வி பயின்றார்.

மேலும், கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் மிக்கவர், சிறந்தநீச்சல் வீரராகவும் விளங்கியவர். படிப்படியாக அரசியல் வாழ்வில் மேம்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதல்வரானார் என தெரிவித்தனர்.

அப்போது, விழா மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் கண்கலங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x