'விபத்தில்லாமல் வாகனங்களை இயக்கி உயிர்களைக் காப்பது ஓட்டுநர்களின் கடமை': தேனியில் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பேச்சு

'விபத்தில்லாமல் வாகனங்களை இயக்கி உயிர்களைக் காப்பது ஓட்டுநர்களின் கடமை': தேனியில் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பேச்சு
Updated on
1 min read

கடந்த ஆண்டு விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்கிய லோயர்கேம்ப் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை பாராட்டி தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இங்குள்ள பேருந்துகள் கடந்த ஆண்டு விபத்து ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இயக்கப்பட்டன. இதனால் பாதுகாப்பு இயக்கப் பணிமனையாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் எம்ஏ முருகேசன் தலைமை வகித்தார். மண்டல பொது மேலாளர் ந.கணேசன் முன்னிலை வகித்தார்.

இந்தப் பணிமனையில் பணிபுரியும் 114 தொழிலாளர்களுக்குப் பரிசு வழங்கி நிர்வாக இயக்குநர் எம்ஏ.முருகேசன் பேசியதாவது:

ஒவ்வொரு உயிரும் விலை மதிப்புமிக்கதாகும். எனவே விபத்தில்லாமல் வாகனங்களை இயக்கி உயிர்களை பாதுகாப்பது ஓட்டுநர்களின் கடமை. விபத்தினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு அக்குடும்பத்தையே பாதிக்கும்.

மதுரை கோட்டத்தில் லோயர்கேம்ப், நத்தம், திருப்பரங்குன்றம், திருப்புவனம், மேலூர், ராஜபாளையம்-1 ஆகிய கிளைகள் 2019-ம் ஆண்டு விபத்தில்லாத பாதுகாப்பான பேருந்து இயக்கம் மேற்கொண்ட பணிமனையாகும்.

2018-ம் ஆண்டு மதுரை கோட்டத்தில் விபத்தினால் 159 உயிரிழப்பு ஏற்பட்டது. 2019-ல் 139 ஆக குறைந்துள்ளது. இது முற்றிலும் தவிர்த்து விபத்தில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை மேலாளர்கள் முகமது ராவுத்தர், சரவணக் குமார், உதவி மேலாளர்கள் ரமேஷ், லாரன்ஸ், நாகசந்திரபோஸ், சரவணன், ரமேஷ், மணிவண்ணன், உதவிப் பொறியாளர்கள் தனபாண்டியன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in