Published : 21 Feb 2020 02:33 PM
Last Updated : 21 Feb 2020 02:33 PM
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தியதைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்து அரசுக் கல்லூரி மாணவிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்தனர். அதனை காவல் துறையினர் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அங்குள்ள மாணவர்கள் இரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர்த்தப்பட்ட கட்டணம், இந்தியாவின் மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ள கட்டணத்தை விட பன்மடங்கு அதிகம் என, மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இச்சூழலில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று (பிப்.21) புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்தனர். அப்போது, அவர்களைக் காவல் துறையினர் தடுத்ததால் மத்திய தபால் நிலையம் முன்பு மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT