Published : 20 Feb 2020 08:58 PM
Last Updated : 20 Feb 2020 08:58 PM

'இந்தியன் 2' படபிடிப்பில் விபத்து விவகாரம்: லைகா நிறுவனம் மீது போலீஸ் வழக்குப்பதிவு

நசரத்பேட்டை, இவிபி ஃபிலிம் சிட்டியில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள், 9 பேர் காயமடைந்தார்கள். இந்த விபத்து குறித்து லைகா நிறுவனம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

'இந்தியன் 2' படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பிரம்மாண்ட செட் போட்டு நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற படப்பிடிப்பு தினமும் நடந்து வந்தது.

படப்பிடிப்பின் போது ஒரு காட்சிக்காக கலைஞர்கள், டெக்னிஷியன்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். படப்பிடிப்புக்காக ராட்சத கிரேன் விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கமல், ஷங்கர் உள்ளிட்டோர் ஓய்வுக்காக பக்கத்தில் உள்ள இடத்தில் இருந்தனர்.

படக்குழுவினர் ஆங்காங்கே படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இறந்தவர்கள் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அபிராமபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் ஆந்திராவைச் சேர்ந்த மது (29), சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சந்திரன் (58) என்று தெரியவந்துள்ளது.

விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீஸார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்தவுடன் கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த விபத்து குறித்து கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (எ) பரத்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். பரத் குமார் புகாரில் தான் திரைப்பட இணை இயக்குனராக பணிபுரிந்து வருவதாகவும், கடந்த 10 நாட்களாக இந்தியன்-2 சினிமா படப்பிடிப்பு இவிபி-யில் நடந்து வருவதாகவும், நேற்றிரவு(19/02) சுமார் 09-30 மணியளவில் படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் சாய்ந்ததில் 3 நபர்கள் இறந்த விட்டதாகவும். பத்து நபர்கள் காயமடைந்ததாகவும் தற்போது தான் சவீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் ‘லைகா’ நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் கவனகுறைவாக இருந்ததாலும், அஜாக்கிரதையாக கிரேன் ஆபரேட்டர் செயல்பட்டதாலும் விபத்து நடந்ததாகவும் உரிய நடவடிக்கை வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இணை இயக்குநர் அளித்த புகாரின்பேரில் கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், ப்ரொடக்‌ஷன் மேனேஜர் உள்ளிட்டோர் மீது மீது ஐபிசி 287, 337, 338 304 (a) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x