Published : 20 Feb 2020 11:47 AM
Last Updated : 20 Feb 2020 11:47 AM

செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்: குற்றச்சாட்டு பதிவுக்காக மார்ச் 3-ல் ஆஜராக உத்தரவு

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. 2015-ம் ஆண்டு அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.90 லட்சத்தைப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரூ.2 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி மந்தைவெளி வீட்டுக்கு சீல் வைத்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை தரப்பில் நோட்டீஸ் கொடுத்தது. அன்றைய தினமே முன் ஜாமீன் வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு காவல்துறை சார்பில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது.

அதன்படி அவரை பிப்.14 விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து கடந்த 14-ம் தேதி பட்ஜெட் கூட்டத்துக்குப் போகும் முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

இந்நிலையில் இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராக மத்தியக்குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகவிருந்த நிலையில் இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகிய மூன்று பேரும் இன்று ஆஜராகினர். குற்றச்சாட்டு பதிவிற்காக வழக்கு 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 3-ம் தேதியன்று கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x