Published : 20 Feb 2020 08:27 AM
Last Updated : 20 Feb 2020 08:27 AM

'இந்தியன் 2' விபத்து: மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்; கமல் வருத்தம்

கமல்ஹாசன்: கோப்புப்படம்

சென்னை

மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கமலுடன் 'இந்தியன் 2'-வில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

'இந்தியன் 2' படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பின்போது ஒரு காட்சிக்காக கிரேன் அமைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு (பிப்.19) எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

பிரம்மாண்ட விளக்கு ஒன்றை கிரேன் மீது வைத்ததால் எடை தாங்காமல் கிரேன் அறுந்து விழுந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இறந்தவர்கள் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) என்று தெரியவந்துள்ளது.

விபத்தின்போது கமல்ஹாசன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்ததாகவும் அடிப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவியதாகவும் கூறப்படுகிறது.

இறந்தவர்களின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்கள் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக, கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், "எத்தனையோ விபத்துகளைச் சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களைப் பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்" என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x