Published : 20 Feb 2020 07:31 AM
Last Updated : 20 Feb 2020 07:31 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தடியடி நடத்திய தினம்: கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்தை கருப்பு தினமாக அனுசரித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

சென்னை

கடந்த 2009-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்தின் 10-ம் ஆண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது சில வழக்கறிஞர்கள் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உயர் நீதிமன்ற போலீஸார், கடந்த 2009 பிப்.19-ம் தேதி உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து சில வழக்கறிஞர்களைக் கைது செய்ய முயன்றபோது கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்தை ஒவ்வோர் ஆண்டும் பிப்.19-ம் தேதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் (எம்எச்ஏஏ)எம்.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் ஆர்.சுதா, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x