Published : 20 Feb 2020 07:29 AM
Last Updated : 20 Feb 2020 07:29 AM

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் எதிரொலி- சென்னை முழுவதும் கண்காணிப்பு தீவிரம்; வீடியோ எடுக்க ஆணையர் உத்தரவு

சட்டப்பேரவை கூட்டத் தொடர், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து சென்னை முழுவதும் கண்காணிப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. முக்கிய நிகழ்வுகளை வீடியோ எடுக்கவும் போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ம் தேதி நடந்த போராட்டத்தின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸார் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக முஸ்லிம் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

சட்டபேரவையில் தீர்மானம்

மேலும், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த முஸ்லிம் அமைப்புகள், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சேப்பாக்கத்தில் நேற்று பேரணி நடத்தினர். தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருவதால் இந்த நேரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர்.

மீறி நடந்து விட்டால் அந்த விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கை முழுமையாக கட்டுக்குள் வைக்கும்படி போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

24 மணி நேரமும்..

மேலும், முக்கிய இடங்களுக்கு தாமே நேரில் சென்று ஆய்வு செய்தும் வருகிறார். 24 மணி நேரமும் போலீஸார் ரோந்து பணியில் விழிப்புடன் இருக்கவும், சிறு சம்பவம் நடைபெற்றாலும் அதற்கு உடனடி தீர்வு காணவும், அதை வீடியோவாகபதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உளவுப் (நுண்ணறிவு) பிரிவு போலீஸார் எந்நேரமும் விழிப்புடன் இருக்கவும், அதை துணை ஆணையர்களான ஆர்.திருநாவுக்கரசு, எம்.சுதாகர் ஆகியோர் நேரடியாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x