Published : 20 Feb 2020 07:25 AM
Last Updated : 20 Feb 2020 07:25 AM

சிவானந்தா குருகுலம் தலைவருக்கு மக்கள் அஞ்சலி

காட்டாங்கொளத்தூர் சிவானந்தா குருகுலத்தின் தலைவர் மறைவுக்கு எம்எல்ஏ, எம்பி மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சிவானந்தா குருகுலத்தின் தலைவராக இருந்தவர் எஸ்.ராஜாராம். இவர் உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன் தினம் அவர் காலமானார். அவரின் உடல் காட்டாங்கொளத்தூர் குருகுலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு பாஜக எம்பி இல.கணேசன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலந்தூர் தா.மோ.அன்பரசன்,தாம்பரம் எஸ்.ஆர். ராஜா, திருப்போரூர் இதயவர்மன் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, முன்னாள் பள்ளிகல்வி இயக்குநர் மணி மற்றும் தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இன்று உடல் தகனம்

மறைமலை நகரில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. அமெரிக்காவில் உள்ள இவரது மகன் கிஷோர் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் நேற்று நடக்க வேண்டிய சடங்குகள் இன்று நடைபெறுகிறது என குருகுல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தலைவர்கள் அஞ்சலி

சிவானந்தா குருகுல நிர்வாகி ராஜாராம் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தொண்டு என்று சொல்லுக்கு அடையாளமாக, அதற்காகவே தன்வாழ்வை அர்ப்பணித்தும் கொண்டவர் ராஜாராம். அவரின் இறப்பு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள், முதியோர் என பலருக்கும் ஆதரவுக்கரமாக இருந்து மறுவாழ்வு அளித்தவர். அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சிவானந்தா குருகுலத்தை பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்த ராஜாராம், ஆதரவு இல்லாத பலருக்கும் அடைக்கலம் அளித்துள்ளார். அவர்களுக்கு தங்க இருப்பிடம், உணவு, கல்வி ஆகியவற்றை வழங்கிய சேவகர் ராஜாராம் ஆவார். ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்வதையே தமது வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்த ராஜாராமின் மறைவு அவரை நம்பியிருப்பவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பெற்றோர் இல்லாத பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என ஆதரவற்றோர்களின் சரணாலயமாக சிவானந்த குருகுலம் திகழ்ந்தது. மனித மனங்களில் வறண்டு போன அன்பு, கருணையை ஆதரவற்றோர் மீது மடைமாற்றம் செய்து,அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுத்தவர் ராஜாராம்.

அவரது மனிதநேய சேவையைப்பாராட்டி, இந்திய அரசின் சார்பில், பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொண்டே மகேசன்தொண்டு என்று வாழ்ந்த ராஜாராமை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குருகுலத்தினருக்கும், ஆதரவற்றோர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சிவானந்தா குருகுலத்தின் தலைவர் ராஜாராம் காலமான செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோருக்கும் ஆதரவாக இருந்து அர்ப்பணிப்போடு செயல்பட்டவர். சிவானந்தா குருகுலம் சேவைப்பணியில் சிறப்பாக விளங்குவதற்கு தலைவராக இருந்த ராஜாராம் ஆற்றிய மகத்தான பணிகள் குருகுலத்தின் தொடர் சேவைப்பணிக்கு பேருதவியாக இருக்கும். அவரின் மறைவு குருகுலத்துக்கு பேரிழப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x