Published : 20 Feb 2020 07:07 AM
Last Updated : 20 Feb 2020 07:07 AM

'இந்தியன் 2' படப்பிடிப்பில் கோர விபத்து: 3 பேர் பலி; பலர் காயம்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கமலுடன் 'இந்தியன் 2'-வில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

'இந்தியன் 2' படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பின் போது ஒரு காட்சிக்காக கிரேன் அமைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பிரம்மாணட விளக்கு ஒன்றை கிரேன் மீது வைத்ததால் எடை தாங்காமல் கிரேன் அறுந்து விழுந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இறந்தவர்கள் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) என்று தெரியவந்துள்ளது.

விபத்தின் போது கமல்ஹாஸன் படப்பிடிப்பு தளத்தில் இருந்ததாகவும் அடிப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவியதாகவும் கூறப்படுகிறது.

இறந்தவர்களின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்கள் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x