Published : 20 Feb 2020 06:45 AM
Last Updated : 20 Feb 2020 06:45 AM

3000 மெட்ரிக் டன் குப்பையை அகற்ற ஸ்பெயின் நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம்: உயர் நீதிமன்றத்தில் ஆணையர் பதில் மனு தாக்கல்

சென்னை மாநகரில் 7 மண்டலங்களில் சேகரிக்கப்படும் 3000 மெட்ரிக் டன் குப்பை கழிவுகளை அகற்ற ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் குடியிருப்புகளுக்கு அதிகமாகவும், வணிக வளாகங்களுக்கு குறைவாகவும் முறைகேடாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு கடந்த 2018-ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாக துணைச் செயலர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அப்போது மாநகராட்சி ஆணையர் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி பதில்மனுவை தாக்கல் செய்தார். அதில், “சென்னையில் உள்ள முக்கிய நீர்வழித்தடங்களான கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கவும், கழிவுகள் சேகரமாவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தற்போது 7 மில்லியன் டன் குப்பைக் கழிவுகள் சேகரமாகி வரும் நிலையில், வீடுதோறும் சென்று குப்பையை பெற்று பெருங்குடியில் சேகரித்து அகற்றும் வகையில் ரூ. 400 கோடியில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகரில் 7 மண்டலங்களில் முழுமையாக சேகரிக்கப்படும் 3000 மெட்ரிக் டன் குப்பையை அகற்ற ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 8 மண்டலங்களில் 4 மண்டலங்களில் இப்பணியை மாநகராட்சியும், 4 மண்டலங்களில் தனியாரும் மேற்கொள்வர்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அப்போது அரசு தரப்பில், ரூ. 400 கோடி திட்டத்துக்கு 30 நாட்களில் அனுமதி அளிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ம் கட்ட நிதி எப்போது தமிழகத்துக்கு வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். சொத்துவரி உயர்வை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களில் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை பிப்.27-க்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x