

கே.என்.நேரு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்று அறிவாலயம் சென்றுவிட்டார் என்றதுமே திருச்சியில் தனி ஆவர்த்தனம் செய்யலாம் என கணக்குப் போட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆனால், தனக்குப் பதிலாக தனது மகனை திருச்சி அரசியல் களத்தில் இறக்கி மகேஷின் மனக்கோட்டையைத் தகர்த்துவிட்டார் நேரு.
“என்னால் இனிமேல் திருச்சி அரசியலில் அதிக கவனம் செலுத்த முடியாது. அதிக நாட்கள் சென்னையிலேயே இருக்க வேண்டி வரும் என்பதால் திருச்சி நிகழ்ச்சிகளிலும் அதிகமாக என்னால் கலந்து கொள்ளமுடியாது. எனவே, என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தம்பியை (மகன் அருண் நேரு)வைத்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டாராம் நேரு. இதையடுத்து கடந்த 12-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற திமுக பிரமுகர் வீட்டுத் திருமணம் ஒன்றில் அப்பாவின் பரிவார வட்டத்துடன் வந்து கலந்து கொண்டாராம் அருண் நேரு. அப்போது அவருக்கு அமர்க்களமாய் வரவேற்பு கொடுத்து அசத்திய நேருவின் அடிப்பொடிகள், அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்கு வந்த தம்பிக்கும் தடபுடல் வரவேற்பு தந்து அசத்தினார்களாம். சீக்கிரமே மகனுக்கு திமுக இளைஞரணியில் பதவி வாங்கித் தந்துவிடுவார் நேரு - இதுதான் இப்போது திருச்சி திமுகவில் பேசப்படும் ஹாட் டாபிக்!
- காமதேனு இதழிலிருந்து (பிப்ரவரி 23, 2020)