Published : 19 Feb 2020 03:54 PM
Last Updated : 19 Feb 2020 03:54 PM

காவிரி டெல்டா; பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற சட்ட முன்வடிவைக் கொண்டு வந்தால் ஆதரிக்கிறோம்: ஸ்டாலின் பேச்சு  

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தால் திமுக அதை ஆதரிக்கும். மக்களவையிலும் இதை வலியுறுத்துவோம் என ஸ்டாலின் பேசினார்.

பேரவையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:

''காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் கடந்த 9-ம் தேதி அறிவித்துள்ளார். அப்போது, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று கூறினாரே தவிர, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதுமட்டுமின்றி பிப். 10 அன்று மத்திய அரசுக்கு முதல்வர் எழுதிய கடிதத்திலும், அதுபற்றிக் குறிப்பிடப்படவில்லை. எனவே அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும், ஏற்கெனவே அறிவித்திருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்தால்தான் பாதுகாக்கப்பட்ட, சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு சாலச் சிறந்ததாக அமைந்திட முடியும்.

இதுகுறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அப்படிக் கேள்வி எழுப்பிய நேரத்தில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இதுகுறித்து முதல்வரும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து, இனிமேல் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வராத வகையில், ஒரு சட்டமுன்வடிவை இதுவரை ஏன் கொண்டுவராமல் இருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி.

எனவே, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் 16.01.2020 அன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் பொதுமக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை அமைச்சர் 10.02.2020 அன்று ஒரு கடிதத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்டமுன்வடிவை மசோதாவாக, தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

ஏன் என்றால் சட்டப்பேரவை இன்றும், நாளையும்தான் நடைபெற உள்ளது. அத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் நிச்சயமாக, உறுதியாக திமுக அதற்கு முழு ஆதரவு தரத் தயாராக இருக்கிறது.

அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் எங்களுடைய திமுக உறுப்பினர்கள் நிச்சயமாக இதுகுறித்து வலியுறுத்தி, வற்புறுத்தி, உறுதியாகப் பேசுவார்கள். எனவே அந்த வகையில் இந்தப் பிரச்சினையை நான் முதல்வரின் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன்.

நான் தீர்மானமாகக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். 2 நாட்கள்தான் சட்டப்பேரவை இருக்கிறது. இன்று மாலை கூட அமைச்சரவைக் கூட்டம் இருப்பதாகச் செய்தியைப் பார்த்தோம். எனவே ஒரு நல்ல முடிவு வரும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன்.

இதனை நாங்கள் மட்டும் அல்ல, டெல்டா பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதுகுறித்து நேற்று கூட முதல்வர் இதே அவையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள் என்று வீராவேசமாக, உணர்ச்சியோடு சொன்னார்.

அதனால்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதை மீண்டும் பதிவு செய்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்”.

இவ்வாறு சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பின்னர் இதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “ இது சம்பந்தமாக, சட்ட நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்” என விரிவாகப் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x