Published : 19 Feb 2020 12:43 PM
Last Updated : 19 Feb 2020 12:43 PM

ஹஜ் பயணிகளுக்காக ரூ.15 கோடியில் புதிய கட்டிடம்; உலமாக்கள் ஓய்வூதியத் தொகை இரு மடங்கு உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் சிறுபான்மை மக்களுக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அதில் ஹஜ் பயணிகள் தங்க வசதியாக சென்னையில் கட்டிடம், உலமாக்கள் ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்துதல் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பாக சில அறிவிப்புகளை 110 விதியின்கீழ் முதல்வர் வெளியிட்டார்.

அந்த அறிவிப்புகள்:

''தமிழ்நாட்டில் உள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்று வறிய நிலையில் உள்ள பேஷ் இமாம், மோதினார், அரபி ஆசிரியர் மற்றும் முஜாவர் ஆகிய உலமாக்களுக்கு தற்போது 1,500/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்களுக்கு வழங்கப்படும் இந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகை 1,500/- ரூபாயிலிருந்து 3,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஹஜ் குழுவின் மூலம் 4,000 பயணிகள் சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது 4,300-க்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

ஹஜ் பயணிகள் தங்களுடைய பயணத்திற்கு முன்பு தங்கி கடவுச்சீட்டு, பயண உடமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரியம் சென்னையில் ஒதுக்கீடு செய்யும் நிலத்தில் ஒரு ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டப்படும்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2,814 வக்ஃப் நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. இந்தப் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 25,000 ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்’’.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x