Published : 19 Feb 2020 12:37 PM
Last Updated : 19 Feb 2020 12:37 PM

ட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் குடிசைப் பகுதி மக்கள் வெளியேற உத்தரவு; கே.எஸ்.அழகிரி கண்டனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருவதையொட்டி, குடிசைப் பகுதி மக்கள் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பை குஜராத் அரசு திரும்பப் பெற வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப்.19) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதல் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் அக்கறை காட்டுவதை விட, அயல்நாடுகளில் சுற்றுப் பயணம் செய்வதில் மிகுந்த முனைப்புக் காட்டி வருவதை அனைவரும் அறிவார்கள். சில நாளேடுகளில் இவரை வெளிநாட்டில் வாழ்கிற இந்தியப் பிரதமர் என்று கூட விமர்சனம் செய்ததுண்டு. நாடாளுமன்றம் நடைபெறுகிற காலத்தில் கூட வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட வித்தியாசமான பிரதமராக நரேந்திர மோடியைக் காண முடிந்தது. ஆனால், உலக நாடுகளோடு சுமுகமான சூழ்நிலை நிலவுகிறதா என்று ஆய்வு செய்தால் பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகிற பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவருக்குக் கோலாகலமான வரவேற்பு கொடுப்பதற்கும், அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கும் இந்திய அரசு தீவிரமான முனைப்பைக் காட்டி வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திற்கு பிப்ரவரி 24-ம் தேதி வருகை தர இருக்கிற அமெரிக்க அதிபருக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அகமதாபாத் நகரை அழகுபடுத்துவதற்காக ரூபாய் 80 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு வரவேற்பு கொடுக்க அகமதாபாத்தில் புதிதாக அரங்கம் கட்டப்பட்டு அங்கே தான் 'நமஸ்தே ட்ரம்ப்' என்கிற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறுகிற இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஏழை, எளிய மக்கள் வாழ்கிற குடிசைப் பகுதி இருக்கிறது. அப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு வாழ்ந்து வருகிற குடிசைவாசிகளுக்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் 7 நாட்களில் உங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால் பலவந்தமாக நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என்று அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

வெளியேற்றப்பட்டவர்களுக்கு மறுகுடியிருப்பு உத்தரவாதம் கூட கொடுக்கப்படவில்லை. இத்தகைய கொடூரமான நிகழ்வு அந்தப் பகுதியில் வாழ்கிற ஆயிரக்கணக்கான மக்களிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து அரசின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால், குஜராத் பாஜக அரசு இதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்க வரும்போது எந்த குடிசைப் பகுதியும் அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக 600 மீட்டர் தொலைவுக்கு தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தச் செயல் குடிசைப் பகுதிகளில் வசிக்கிற ஏழை, எளிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீண்டகாலமாக உள்ள குடிசைப் பகுதிகள் அமெரிக்க அதிபர் பார்வையில் படக்கூடாது என்று நினைக்கிற பாஜகவின் மனோபாவம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகி அஸ்வதி ஜூவ்லா அந்த தடுப்புச் சுவருக்கு அருகாமையில் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

குடிசைகளை மறைக்கும் தடுப்புச் சுவர்களை எழுப்பக் கூடாது, குடிசைப் பகுதிகளை அமெரிக்க அதிபர் பார்க்கக் கூடாது என்ற சிந்தனை சர்வாதிகாரப் போக்கு கொண்டது. ஜனநாயக நாட்டில் இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்ற நோக்கத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் நடத்தி வருகிறார். பாஜக ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகியை தமிழ்நாடு காங்கிரஸ் பாராட்டுகிறது, போற்றுகிறது.

எனவே, இந்தியாவில் ஏழை, எளிய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல முடியாத திறனற்ற நரேந்திர மோடி அரசு இத்தகைய எதேச்சதிகாரமான போக்கைக் கைவிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகள் உலகம் அறிந்த ஒன்று. இதைத் தடுப்புச் சுவர் எழுப்பி, மூடி மறைப்பதன் மூலம் தம்மை தாமே ஏமாற்றிக் கொள்ள நரேந்திர மோடி முனைவது மிகுந்த நகைப்புக்குரியது. இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக குஜராத் அரசு திரும்பப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்

ட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி மக்கள் வெளியேற உத்தரவு

உ.பி.யில் இன்று 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்: முதல் நாளில் 2.39 லட்சம் மாணவர்கள் வரவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x