Published : 19 Feb 2020 11:49 AM
Last Updated : 19 Feb 2020 11:49 AM
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகளின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக கீழடி அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று (பிப்.18) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக, ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு தமிழக அரசின் சார்பில் இன்று தொடங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் கல்வி, கலை, கட்டுமான, கலாச்சாரப் பெருமைகளைப் பறைசாற்றும் புதிய ஆதாரங்கள் இந்த அகழாய்வில் கிடைக்கும்; தமிழர் நகர்ப்புற நாகரிக பெருமை உலகெங்கும் பரவும் என நம்புவோம்!
கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்கப்படும் நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட முதல் 3 கட்ட அகழாய்வுகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அவற்றை உடனடியாக வெளியிட்டு தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்கு வெளிப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT